பிள்ளையார் கதை “ஐங்கரற்கு வாய்ந்த நல்விரத மான்மிய” முரைப்பதற்காக எழுந்ததென அதன் சிறப்புப் பாயிரங் கூறும். அகவல் யாப்பினாற் செய்யப்பட்ட இந் நூற்கான பொருள்
செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கவிதையி லுள்ள துவும்
இலிங்க புராணத் திருந்தநற் கதையும்
தேர்ந்தெடுத் தொன்றாய்த் திரட்டி
எடுக்கப்பட்டதெனவும், இதனைச் செய்தோன்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாத னளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதன்
யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் வரத பண்டிதர் அவர்கள் எனவும் அச்சிறப்புப் பாயிரத்தினால் அறியலாம்.
ஆனைமுகன் பிறந்த வரலாறும், அவன் கயமுகாசுரனை அழித்து மூஷிகத்தை வாகனமாக்கியதும், திருச்செங்காட்டின் சிவனை யர்ச்சித்துக் கணபதீச்சுர மாக்கியதும், ஆவணிச் சதுர்த்தி விரதச் சிறப்பும், மார்கழி விநாயக சஷ்டி விரத மகிமையும், விநாயகனை கருமத் தொடக்கத்தில் வணங்கவேண்டிய அவசியமும், சண்முகன் பிறந்த கதையும், திருமால் பாம்புருவானதும், கார்த்திகைக்குக் கார்த்திகையாந் திருக்கார்த்திகையின் பின்வரும் விரதச் சிறப்பும், அதனைப் பாம்புருவான திருமாலும் இலக்கணசுந்தரி என்பாளும் அனுஷ்டித்துச் சாப விமோசனம் பெற்றதும் இதிற் கூறப்படுகின்றன.
நோன்பிருந்து பிள்ளையார் கதைகேட்பதால் வரும் பயன்பற்றி இந்நூற்பயன் கூறும். அதனை கீழே காணுங்கள்.
பொன்னுமிகுங் கல்விபுகும் புத்திரரோ டெப்பொருளு
மன்னு நவமணியும் வந்தணுகு – முன்னி
யொருக்கொம்பின் யானைமுக வுத்தமனார் நோன்பின்
றிருக்கதையைக் கேட்கச் சிறந்து.பொற்பனைக்கை முக்கட் புகர்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தி னோன்பின் கதைதன்னைச் – சொற்பெருகக்
கற்றவரு றோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.வெள்ளையெரு தேறும் விரிசடையோன் பெற்றெடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை – யுள்ளபடி
நோற்றோர் மிகவாழ்வர் நோலா தருகிருந்து
கேட்டோர்க்கும் வராது கெடு.சூலியார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவர்
சாலமிகும் வெங்கலியார் தானோற்கில் – மேலைப்
பிறப்பெல்லா நல்ல பெருஞ்செல்வ மெய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை சு. சுப்பிரமணியசாஸ்திரிகள் அவர்கள் 1927ம் வருடம் இதனை பதிப்பித்து வெளியிட்டார்கள்.