வரகவி க. கிருஷ்ணபிள்ளை
சிறுகுறிப்பு
பிறப்பிடம் : பொன்னாலைதந்தையார் பெயர் : கணபதிப்பிள்ளை
சிறப்பு : வாய்ப்பாட்டு
மண்ணுலகில் : 1898-1956
ஈழத்தின் வடபால் பொன்னாலை என்னும் ஊரிலே வேய்ங்குழல் கண்ணனாகிய வரதராஜப்பெருமாளின் ஆலயச்சூழலிலே 1989 ஆம் ஆண்டு தை மாதம் 10ம் திகதி கணபதிப்பிள்ளை தம்பதிகளுக்கு புத்திரனாகப் பிறந்தவர்தான் வரகவி கிருஷ்ணபிள்ளை அவர்கள். இவர் தனது கல்வியினை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிற் பயின்றார். கல்வி பயிலும் போதே இசைக்கலையில் ஆர்வம் கொண்டவராயிருந்தார். இதற்குக்காரணம் இவர்களின் மூதாதையர் கவிவல்லுனர்களாக இருந்தமை எனலாம்.
திரு. கிருஷ்ணபிள்ளை தனது சிறு பராயத்திலே அவ்வூர் வைத்தியராகவிருந்த அண்ணாவி சுப்பிரமணியம் என்பவரை அணுகி அவரிடம் இசை பயின்று, அவரோடு நாடகம் நடிப்பதிலும் ஈடுபட்டார். இதன் பயனாக வாய்ப்பாட்டு இசையிலும் நடன, நாடக நிகழ்வுகளிலும் பங்கெடுக்க ஆரம்பித்தார். மேலும் தமது பாரம்பரிக் கலையான கவி இயற்றும் தன்மையினால் பலவிதமான பாடல்களை இயற்றுவதிலும் மேடைகளில் அவற்றை அரங்காற்றுவதிலும் ஈடுபாடு கொண்டு செயற்பட்டார். இவருடைய கவி வல்லமையும், பாடல்களை இசைக்கும் தன்மையும், நடிக்கும் திறமையும், முன்னேற்றப்பாதையிலே நன்கு சென்றுகொண்டிருந்தன. இவ்வேளையிலே இவருடைய சிறிய தந்தையாரான சண்முகம் என்பவரின் உந்துதலால் பிள்ளை அவர்கள் மலேசியா நாட்டுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. இது மட்டுமன்றி அந்நாட்டிலேயே புகையிரதப் போக்குவரத்துச் சேவையில் நிலைய அத்தியட்சகராகவும் கடமை புரிந்துள்ளார். அங்கு கடமை புரிந்ததுடன் மட்டுமன்றி அந்நாட்டிலுள்ள இசைக்கலைஞர்களுடன் நட்பும் பூண்டு பழகுவதன் மூலம் தனது இசைக்கலையை மேம்படுத்தினார்.
பிள்ளை அவர்கள் சிலவருடங்களின் பின் ஈழம் திரும்பி தனது இயற்கை ஞானத்தினாலும் பல்துறை சார் சிந்தனைகளினாலும், கற்பனைத்திறத்தாலும், பல கீர்த்தனைகளை இயற்றியும், அவற்றினை இசையரங்கங்களினூடும் பரவச்செய்தார். இவர் பாடிய கீர்த்தனைப்பாடல்கள் நூற்றுக்கணக்கானவை. எனினும் இருநூறு சாகித்தியங்களே பிரபலமாகப் பாடப்பட்டவைகளாகும். இவை பொன்னாலை வரதராஜப்பெருமாள், பறாளாய் முருகன், வழக்கம்பராய் அம்பாள், வல்லிபுர ஆழ்வார், கதிர்காமக்கந்தன் ஆகிய தெய்வங்கள் மீது பாடப்பட்டவையாகும். இவற்றோடு நாட்டின் முன்னேற்றத்திற்கு அறிவுரை கூறுவனவாகும். தமிழ் எழுச்சி, ஈழத்தின் வளம், சமுதாய எழுச்சி, இசை என்பன பற்றி விதந்துரைக்கும் பாடல்களாகவும் இசைப்படைப்புகள் அமைந்து விளங்குகின்றன. இப்பணிகள் பிள்ளை அவர்களை ஒரு இயல் இசை சாகித்திய கர்த்தாவாக்கியது எனலாம்.
திரு கிருஷ்ணபிள்ளை அவர்கள் பாடிய கீர்த்தனைகளுள் முதலாவதாக கம்பீரநாட்டை ராகத்தில் அமைந்த “ஓம் பிரணவமுதல்வா” என்றாரம்பிக்கும் கீர்த்தனை பிரபலமானது. இக்கீர்த்தனையானது இன்றும் சங்கீதபூஷணம் பொன்னாலை சு. கணபதிப்பிள்ளை அவர்களால் இசையரங்குகளில் பாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பிள்ளை அவர்களின் கீர்த்தனைப்பாடல்கள், ‘தாலபுரத்தார்கீதம்’ என்று குறிப்பிடப்படுகின்றது. மேலும், இதுபற்றிய பாடல்கள் ‘நமற்காரநவநாகரிக நவரஸக்கீர்த்தனைகள்’ என்ற பெயர்கொண்ட நூலாகவும் வெளிவந்துள்ளது. பிள்ளை அவர்களின் கீர்த்தனைகளின் சிறப்பாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
கீர்த்தனை (இராகம்)
1. ஓம் பிரணவமுதல்வா (கம்பீரநாட்டை)
2. துணைநீ ஆதரி பொன்னாலை துவாரகேசவா (கமாஸ்)
3. கிருபை ஈசனே (கமாஸ்)
4. கருணைப்பிரகாசா கதிர்காமநாதா (சண்முகப்பிரியா)
5. சகலகலாவல்லியே (நரட்டைக்குறிஞ்சி)
6. மங்களமாய் வாழவேண்டும் (சுருட்டி)
7. அதிக உணவு பயிரிடுவீர் (பேகட)
8. பனையே பிரபஞ்சதஞ்சமே பறந்திடும் பஞ்சமே (சிந்து பைரவி)
9. வந்தாளா வரதா (நீலாம்பரி)
10. எண்ணும் எழுத்தும் (கமாஸ்)
பொன்னாலை கிருஷ்ணபிள்ளை அவர்கள் இசை பயின்றகாலம் ஸ்வர சாகித்திய அணியிலேயே இசைப்பயிற்சிகள் அமைந்தனவாக அறிகின்றோம். மேலும், இவரிடம், இவரின் சகோதரரான மகனான சு. கணபதிப்பிள்ளை அவர்கள் இசையும் நாடகமும் பயின்றது மட்டுமல்லாமல் தற்போது சிறப்பு மிக்க இசைக்கலைஞனாகவும், சங்கீத பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவரும் இசையில் சிஷ்ய பரம்பரையினரையும் உருவாக்கி இருக்கின்றார். மேலும் பிள்ளை அவர்களிடம் இசையும், ஹார்மோனியமும் பயின்று இசைச்சேவை புரிந்த முருகையா அவர்களும் ஹார்மோனிய இசையினை நிகழ்ச்சிகளுடாக வழங்கி வந்திருக்கின்றார்.
அக்காலத்து இந்தியத் திரைப்படக் கலைஞர்களான என். எஸ் கிருஷ்ணன், கே. பி. சுந்தராம்பாள், எம். ஆர். கோவிந்தன் ஆகியோர்களுடன் திரு கிருஷ்ணபிள்ளை அவர்கள் சேர்ந்து பாடியும், நடித்தும் வந்தனை குறிப்பிடத்தக்கது. இவர் தயாரித்த இசைநாடகங்கள் பலவாகும். அவற்றில் ‘கிருஷ்ணலீலா, ஹம்சன் வதம், எது நல்லவழி, சுதேசம் விதேசம்’ என்பவை சிறப்பானவை. இவர் இறுதியாக தயாரித்தளித்தது யாழ். மனோகராப் படமாளிகையில் நிகழ்ந்த ‘எது நல்லவழி’ என்ற இசை நாடகம் ஆகும். சிறப்பான இசைச்சேவை புரிந்த வரகவி திரு. கிருஷ்ணபிள்ளை அவர்கள் தமது 58 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை விடுத்து நிலையுலகம் சென்றார். எனினும் அன்னாருடைய கலைச்சேவை அவருடைய இசை வாரிசுகள் மூலம் தொடர்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

0 Comments